விபத்து! - ரூ.2500 பரிசு பெற்ற வாரமலர் கதை:
மழை காரணமாக இருட்டு. பாலத்தின் மீது மோதி, பஸ் நின்று விட்டது. பஸ் புழுக்கத்தை விட்டு வெளி வந்தேன். துாறலும், மண் வாசனையுடனான காற்று, இதமாய் இருந்தது. சூடான டீக்காக மனம் அடித்துக் கொண்டது. அருகே, டீக்கடை ஏதும் இல்லை.மீசை அரும்பிய சிறுவன் ஒருவன், பெட்ரோமாக்ஸ் லைட்டுடன் வந்து, ''பஸ் நின்னுடுச்சா?'' என்றான்.
''உனக்கு, இந்த ஊரா?''
''ஆமாண்ணே... டீ குடிப்பீங்களா?''
''கொண்டு வாடா!''
அரைமணியில் இஞ்சி மணம் முன் வர, கேன் நிறைய டீ, பின் வந்தது.
''பஸ் கிளம்ப, இரண்டு மணி நேரமாகும்,'' என்றார், கண்டக்டர்.
''இப்பவே, 7:00 மணியாகுது. 9:00 மணிக்கு தான் வண்டி கிளம்பும். இனிமேட்டு டிபன் ஏதும் கெடைக்காது; ஏய் தம்பி... தோசை, இட்லி எதாவது கிடைக்குமா?'' பக்கத்து சீட் லுங்கி ஆசாமி கேட்டார்.
''உப்புமா போதுமா சார், அரை மணி நேரத்துல கொண்டு வரேன்.''
சற்று துாரத்தில் சிறிய குடிசையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
''ஹோட்டல் வெச்சிருக்கீங்களா?''
''இல்லண்ணே, சின்னதா மெஸ். அக்கா சமைக்கும். நானும், தம்பியும் பரிமாறுவோம்.'' மெலிந்த சிறுவன் ஒருவன், அருகில் டம்ளர்களுடன் நின்றிருந்தான்.
''டீ என்ன விலை?''
''ஏழு ரூபாய்!''
பஸ்சிலிருந்த, 43 பேரும், டீ சாப்பிட்டு விட்டு, டிபனுக்காக காத்திருந்தோம்.
பயணியர் சிலர் உதவியுடன், 'பின்னுக்கு இழுங்க; ம் ம்... எல்லாரும் சேர்ந்து இழுங்க...' என, டிரைவரும், கண்டக்டரும், சேற்றில் சிக்கியிருந்த பஸ்சை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
வெளிச்சம் தெரிந்த வீட்டருகே, காலாற நடந்தேன்.
பத்துக்கு பத்து, ஒற்றை அறை குடிசை. சுவர் மையத்தில், மாலையுடன் முருகர், விநாயகர் புகைப்படம். செங்கல் அடுப்பு. தேங்காய் திருகி கொண்டிருந்தான், சிறுவன். வாணலியில் பளபளத்த உப்புமாவின் வாசனை காற்றில் மிதந்தது.
இலைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார், ஒரு கிழவர். துாக்கி முடிந்த கூந்தல், இழுத்து செருகப்பட்ட புடவை, வியர்வை வழிந்த நெற்றி, கிழவரின் பேத்தி போல... உப்புமாவை பெரிய துாக்கில் மாற்றிக் கொண்டிருந்தவளுக்கு 20- - 22 வயதிருக்கலாம். களையான அவள் முகத்தில் அசாதாரண தீவிரமும், உறுதியும் கோட்டையைப் பிடிக்கப் போகும் தளபதி போல்!
உப்புமா வாசனை பசியை கிளறி, நாவூறியது.
''மாமா... நீங்களும் ராமுவோடு போய் உப்புமா குடுத்துட்டு வரீங்களா?''
''சரிம்மா!''
இலை, சட்னி துாக்குடன் கிழவர் கிளம்ப, என்னிடம் பேசிய சிறுவன், உப்புமா வாளியுடன் பின் தொடர்ந்தான். குட்டிப்பையன் தோளில் தண்ணீர் குடம்.
''என்கிட்ட குடுங்க தாத்தா, நான் பஸ்ல வந்தவன் தான்,'' சட்னி துாக்கை அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டேன்.
எல்லாருக்கும் சுடச்சுட உப்புமாவும், சட்னியும் அவரவர் இடம் தேடி வந்தது. 'பேஷ்... மழைக்கு அருமையாய் நல்லாயிருக்குங்க. மழையால இன்னைக்கு கடை இல்லையா? நான் இந்த பக்கம் அடிக்கடி வந்திருக்கேன்; உங்க கடையை பார்த்ததில்லையே? தம்பி, இன்னொரு கரண்டி உப்புமா போடுங்க... தம்பி, எனக்கு தண்ணீர். எனக்கு சட்னி...' என, ஆளாளுக்கு கேட்டனர்.
இலையுடன் கிழவர் அருகே நின்றிருந்தேன்.
''உங்களுக்கு, இந்த ஊரா, தாத்தா?''
ஆமோதிப்பாக தலையசைந்தது.
''அக்கம்பக்கம் வீடுங்க இல்லையா?''
''கொஞ்சம் தள்ளி இருக்கு,'' ஒரு பெரிய கவரில் சாப்பிட்ட இலைகளை, சின்ன பையன் சேகரிக்க, பெரியவன், சிந்தியிருந்த உப்புமா, சட்னியை ஒரு துணியால் சுத்தம் செய்தான்.
கண்டக்டருக்கு வயிறும், மனமும் நிறைந்தது. அவர்கள் பேச்சில் பணிவும், செயல்களில் ஒழுங்கும் முழுமையாக இருந்தன.
''சீக்கிரம் சாப்பிடுங்க, பஸ் கிளம்பப் போகுது. டிரைவர் கை கழுவிட்டாரு.''
''இன்னொரு டீ கிடைக்குமா, தம்பி?''
''வந்துட்டிருக்கு!''
டீ கேனை தரையில் வைத்து, வைத்து கொண்டு வந்தான், குட்டிப் பையன். ஓரமாக அமர்ந்திருந்தார், கிழவர்.
''டிபன் ரொம்ப நல்லா இருந்தது, தாத்தா.''
''நல்லாயிருந்தா நாலு பேருக்கு சொல்லுங்க!''
பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்தார், கிழவர்.
''அண்ணே, நீங்க பஸ்ல ஏறலையா?'' என்றான், சிறுவன்.
''முக்கிய வேலை ஒண்ணும் இல்லை. இன்னைக்கு இந்த ஊர்லயே தங்கிட்டு, நாளைக்கு காலையில, டீ குடிச்சுட்டு கிளம்பிடறேன்.''
குளிர்க்காற்று இதமாக வீசியது. கண்களை மூடி, அருகிலிருந்த கோவில் நடையில் படுத்தேன். மறந்திருந்த கவலைகள் கண் விழித்தன.
குபேரன் பைனான்சில், 10 ஆயிரம் ரூபாய் போட, 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நம்பி செய்த முதலீடு இரட்டிப்பானது. மளிகைக்கடையில் உழைப்பது வேப்பங்காயாக கசந்தது.
வீட்டையும், கடையையும் பைனான்சில் அடமானம் வைத்து, 10 லட்சத்தை கொடுத்த மூன்றாம் நாள், நிறுவனம் மாயமானது. புகார் தர சொல்லி, போலீஸ் விசாரித்தனர். பைனான்சில் முதலீடு செய்திருந்த, 10 லட்சம் ரூபாயும் போய், இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.
பத்து ஆண்டு உழைப்பின் பலனை இழந்து, நடுத்தெருவில் நின்றிருந்த போது, தவறு புரிந்தது. சுடலை, மாடன் கோபி, குரூஸ் அண்ணன் என, நண்பர்கள் வரிசையாய் தற்கொலை செய்து கொண்டு, பயம் காட்டினர். செலவு கழுத்தை நெரித்தது.
வாழ்க்கையில் சண்டை, சச்சரவு. பிள்ளைகள் பசியில் தவிக்க, வாழ்ந்தது போதும் என, தோன்றியது. யாருடனும் பேச பிடிக்காமல், எங்காவது போய் கடலில், ரயில் முன் விழலாம் என திட்டமிட்டு, கோவிலுக்கு போய் வருவதாய் கூறி, பஸ்சில் ஏறிய நிகழ்வுகள், கண் முன் காட்சிகளாய் விரிந்தது.
காலை ஏதோ உரச, பாய், தலையணையுடன் நின்றிருந்தார், கிழவர்.
''உங்களுக்கும் இங்க தான் படுக்கையா தாத்தா?'
''ஆமாம். கொஞ்சம் நகர்ந்து படுங்க. ரெண்டு பேருக்கும் இது போதும்,'' என, பாயை விரித்தார்.
''ரெண்டு அல்லது மூன்று வருஷமிருக்கும், இந்த இடத்துல ஒரு சின்ன சாலையோரக் கடை, மணின்னு ஒருத்தர் நடத்திக்கிட்டு இருந்தார். இந்த வழியா போகும் போது அந்த கடையில் சாப்பிடுவேன்; ரொம்ப நல்லா இருக்கும். உங்க கடையை இன்னைக்கு தான் பார்க்கிறேன்,'' என்றேன்.
"எந்த ஊரு?"
''அடிகளார்மங்களம்.''
''பக்கத்துல தான்.''
''உப்புமா நல்லா இருந்தது; பெரிசா கடை வெச்சா நல்லா ஓடும்.''
''பார்க்கலாம்.''
"உப்புமா செஞ்ச பொண்ணு, உங்க பேத்தியா?"
"பார்த்தீங்களா?"
''காலாற நடந்த போது, பார்த்தேன்.''
''என் மருமக, நீங்க சொன்னீங்களே மணி, அவரு சம்சாரம்.''
''இப்ப அவரு?
''மாலை போட்டு போட்டோ சுவத்துல மாட்டியிருந்ததை பார்க்கலையா?''
''போயிட்டாரா?''
''ம், விபத்து. இங்கயே தான், யாரோ லாரிக்காரன் அடிச்சுப் போட்டுட்டு போயிட்டான்.'' ''ஐயோ அப்புறம்?''
''மருமகளுக்கு, புருஷனோட சேர்ந்து சமையல் செஞ்சு பழக்கம். அப்ப கடையில் ஆளுங்க இருப்பாங்க. இவள் சமைப்பா, அவங்க உதவி செய்வாங்க. கடை நல்லா போச்சு. அவன் போயிடுவான்னு யாரும் நினைச்சு பார்க்கல.
''அழுது முடிச்சவுடன் என்ன செய்யலாம்ன்னு யோசனை செய்தோம். போறவங்க போயிட்டாலும் இருக்கிறவங்க சாப்பிடணுமே, கூடவே செத்துட முடியுமா? அவன் வெச்சுட்டு போன கடையை தொடர்ந்து நடத்தலாம்ன்னு முடிவு செஞ்சோம். கைம்பொண்ணு, சிறுசு வேற. அதை கல்லாவுல உட்கார வைக்க முடியுமா?
''படிச்சிட்டிருந்த தம்பிகளை உதவிக்கு வெச்சுக்கிட்டா. அக்கா சமைப்பா, தம்பிகள் மீதி வேலையெல்லாம் பார்த்துக்கணும்ன்னு திட்டம் போட்டோம். இங்க வந்தா, எங்க கடையை வேறொருத்தர் நடத்திகிட்டு இருந்தார்.
''எங்ககிட்ட வேலை செஞ்சவங்க, அங்கே வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. மணி போனவுடன் கடையை மூடிடுவோம்ன்னு நினைச்சிருக்காங்க.
''நாங்க போய் நின்றவுடன், 'உங்க மகன், கடன் வாங்கியிருந்தான்; பதிலுக்கு கடையை எடுத்துக்கிட்டோம். கணக்கு சரியாயிடுச்சு...' என்றனர். அவங்களுக்கு அரசியல் செல்வாக்கு வேற இருந்துச்சு,'' என்றார், கிழவர்.
''அப்புறம்?''
''நாங்க வெளியேறிட்டோம். 2,000 ரூபா கொடுத்தாங்க. அதுல இட்லி பானை, கடாய்னு முக்கியமான பாத்திரம் வாங்கினோம். அக்காவும், தம்பிகளும், விடிகாலையிலிருந்து நடு இரவு வரைக்கும் உழைக்கிறாங்க. கடை ஓடுது.''
''ரொம்ப தைரியமா முடிவு செஞ்சிருக்கீங்க.'' ''மூடின கதவுகளை பார்த்து விசனப்படுவது தான் மனுஷன் இயல்பு. ஆனா, இன்னொரு வாசல் திறந்திருக்கிறதை நாம சுய பச்சாதாபத்துல பார்க்கிறதில்லை.
''கை சுத்தமா, நிறைவா, வர்றவங்க மனசு நோகாம வயிற்றை நிரப்பி அனுப்பணும்; நம் உழைப்பிற்கும் லாபம் வெச்சு விற்கணும். நேர்மை, உழைப்பு, திறமையை வைத்து முன்னேறணும்ன்னு முயற்சி செய்யறோம்.
''இப்ப, பசங்களும் சமைக்க கத்துக்கிட்டாங்க. இந்த வருஷம், பள்ளிக்கூடத்துல சத்துணவு செய்து தரச்சொல்லி, வாய்ப்பு வந்திருக்கு. கோவில்ல பிரசாதம் செய்து கொடுக்க, ஒப்பந்தம் போட்டிருக்கோம். ''காஸ் சிலிண்டர் அடுத்த மாசம் வருது. மிக்சி, கிரைண்டர்னு ஒவ்வொண்ணா வாங்கிட்டிருக்கோம். உழைப்பு தான் உயிர் நாடி. அதுல நம்பிக்கை வெச்சா, எந்த கஷ்டத்தையும் சமாளிக்கலாம்,'' என்றார்.
பேச வாய் இழந்து நின்றேன்.
கோழைத்தனம் தளர்ந்த தருணம்:
அந்த சின்ன பெண்ணுக்கு, 20 வயதிருக்குமா? படித்தவள் போல் தெரியவில்லை. பெரியவனுக்கு, 15 வயதிருந்தால் அதிகம், தம்பியாம். 20 வயதில், புருஷன் மரணம்; இரு தம்பிகளும், கிழவருமே ஆதரவு.யாரிடமும் பணமில்லை. ஆனாலும், நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும், மாளாத உழைப்பும், துணிவும், துடிப்பும் இருக்கு. ஏன் இவை எதுவுமே என்னிடம் இல்லை? என்னை நம்பி வந்த பெண்ணையும், பெற்ற பிள்ளைகளையும் நிராதரவாக விட்டுவிட்டு நான் மட்டும் தப்பிக்க ஏன் யோசித்தேன்?
சுய நலமா, கோழைத்தனமா? ஒரு சின்ன பெண்ணால் முடிந்தது, என்னால் முடியாதா? கிழவர் சொன்னாரே, 'வாழ்க்கை இன்னொரு வாசலை திறந்து வைக்கும்...' என்று. அது இதானா? எத்தனை பெரிய தவறை செய்ய இருந்தேன்.
மூடிய கண்ணோரம் நீர் கசிந்தது. ஊருக்கு திரும்ப முடிவெடுத்தேன்.
காலையில் கோவில் குளத்தில் முகம் கழுவி, நிமிர்ந்தேன். டீயுடன் நின்றிருந்தான், சின்ன பையன்.
''பஸ் நிறுத்தம் எங்கே இருக்குப்பா?''
''பக்கத்துலதாண்ணே, பஸ் இங்கேதான் நிற்கும். ஏறிக்கங்க,'' பஸ் நிறுத்தம் வரை வந்து, வழி காட்டி சென்றான், சிறுவன்.
கதை ஆசிரியர்:
ஸ்ரீ மல்லிகாகுருவிபத்து! - கதையை வீடியோ வடிவில் காண:
SPONSORSHIP:
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication












0 Comments
Post a Comment
Thank U for Visit My Story Blog.. I hope U enjoy it...