மூன்று வாக்குறுதிகள்:

ஆதித்யா என்ற இளைஞன் ஒரு காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு கிணற்றைக் கண்டான்.

ஆதித்யாவுக்கு தாகமாக இருந்ததால் கொஞ்சம் தண்ணீர் குடிக்க விரும்பி கிணற்றை எட்டிப் பார்த்தான். ஆனால் வறண்டு கிடந்த கிணற்றில் ஒரு புலி, ஒரு பாம்பு மற்றும் ஒரு மனிதன் சிக்கியிருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைந்தான்.
மூவரும் ஆதித்யாவிடம் தங்களை மேலே இழுக்கும்படி கெஞ்சினார்கள்.

ஆதித்யா பயந்தான். “புலி என்னைத் தின்றுவிட்டால் என்ன செய்வது? பாம்பு என்னைக் கடித்தால் என்ன செய்வது?” என்று அவன் நினைத்தான்.

ஆனால் புலி ஆதித்யாவை காப்பாற்றினால் அவனுக்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தது. பாம்பும் அதற்கு சம்மதித்தது.

ஆதித்யா மூவரையும் வெளியே அழைத்துச் செல்ல கிணற்றுக்குள் ஒரு நீண்ட கயிற்றை எறிந்தான்.

புலி முதலில் வெளியே வந்தது. "எனக்கு உதவியதற்கு நன்றி நண்பா. நீ மீண்டும் எப்போதாவது இந்தக் காட்டிற்கு வந்தால், என் வீட்டிற்கு வா. உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் நிச்சயம் உதவுவேன்," என்று புலி சொன்னது.
அடுத்து வெளியே வந்த அந்தப் பாம்பு, "நீ ஒரு துணிச்சலான இளைஞன். உனக்கு என் உதவி தேவைப்படும் போதெல்லாம் நான் இருப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் என் பெயரைச் சொன்னால் போதும்," என்றது.

இறுதியாக, அந்த மனிதன் வெளியே வந்தான்.

"நன்றி. நன்றி, ஐயா. நான் தலைநகரில் ஒரு பொற்கொல்லராக வேலை செய்கிறேன். நான் என்றென்றும் உங்கள் நண்பராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் எப்போதாவது நகரத்திற்கு வந்தால் என்னைப் பார்க்க வாருங்கள்", என்றான்.

புதிய நண்பர்களை உருவாக்கிய மகிழ்ச்சியில், ஆதித்யா தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தான்.
சில வருடங்களுக்குப் பிறகு...

ஆதித்யா, அதே காட்டிற்கு மீண்டும் வந்தபோது, அவனுக்கு புலியின் வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அவன், புலி இருக்கும் குகைக்குச் சென்றான்.

புலி அவனை அன்புடன் வரவேற்றது. காட்டிலிருந்து கொண்டு வந்த புதிய பழங்களையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்தது.
ஆதித்யா வெளியேறத் தயாரானபோது, புலி அவனுக்கு விலைமதிப்பற்ற, ரத்தினங்களால் ஆன தங்க ஆபரணங்களைக் கொடுத்து, "இதோ, என்னால் முடிந்த சிறிய பரிசு, நண்பா! உனக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்," என்றது.

ஆதித்யா, பரிசுக்கு நன்றி சொல்லி விடைபெற்றான். ஆனால், அந்த நகைகளை என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

பின்னர், அவன் தனது நண்பனான பொற்கொல்லனை நினைவு கூர்ந்தான். "பொற்கொல்லனால் மட்டுமே, நகைகளை உருக்கி, எனக்கு தங்க நாணயங்களாக கொடுக்க முடியும்," என்று எண்ணி, பொற்கொல்லனை சந்திக்க புறப்பட்டான்.

பொற்கொல்லன் செய்த துரோகம்:

பொற்கொல்லன், ஆதித்யாவை அன்புடன் வரவேற்றான். அவன், குளிர்ந்த எலுமிச்சைப் பழ பாணத்தை வழங்கி, அவனது பயணத்தைப் பற்றிக் கேட்டான்.
ஆதித்யா, புலியைப் பார்த்தது பற்றியும், அதன் பரிசுகள் பற்றியும், பொற்கொல்லனிடம் கூறினான். "நகைகளை உருக்கி, தங்க நாணயங்களாக மாற்றி, எனக்கு கொடுக்க முடியுமா?" என்று கேட்டான்.

அந்த நகைகளைப் பார்த்ததும், பொற்கொல்லன் அதிர்ச்சியடைந்தான்.

அவன் கடையில், ராஜாவின் தம்பிக்காக, அந்த நகை செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, காட்டில் காணாமல் போனது, அதே தம்பிதான்! இளவரசரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, வெகுமதி அளிப்பதாக மன்னர் அறிவித்திருந்தார்.

ஆனால், பொற்கொல்லன் தனது அதிர்ச்சியை மறைத்துக்கொண்டான். "இந்த இளைஞன், இளவரசனைக் கொன்றுவிட்டான் என்று நான் ராஜாவிடம் சொன்னால், அரசர் நிச்சயமாக எனக்கு வெகுமதியைத் தருவார்," என்று அவன் நினைத்தான்.

ஆதித்யாவை, சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, பொற்கொல்லன் அரண்மனைக்குச் சென்று, "மன்னரின் தம்பியைக் கொன்றவனைக் கண்டுபிடித்துவிட்டேன்!" என்று கூறினான்.

ஆதித்யாவைக் கைது செய்ய, மன்னர், பொற்கொல்லனின் வீட்டிற்கு வீரர்களை அனுப்பினார். ஆதித்யாவின் பக்கம் நியாயம் கேட்க மறுத்து, மன்னர் அவனை சிறையில் அடைத்தார்.

பொற்கொல்லனின் துரோகத்தை நினைத்து, மனம் நொந்துக்கொண்டான் ஆதித்யா. சிறையில் இருந்து தப்பிக்க, அவன் யோசித்தான்.

அப்போது, அவனுக்கு, கிணற்றில் காப்பாற்றிய பாம்பு நினைவுக்கு வந்தது. அந்த பாம்பின் பெயரை சொல்லி அழைத்தான்.

பாம்பு "கிஸ்!" என்று சீறிக்கொண்டு, ஆதித்யா முன் தோன்றியது.

ஆதித்யாவுக்கு நேர்ந்ததை அறிந்த பாம்பு, அவன் காதில் கிசுகிசுவென ஏதோ சொல்லி, இப்படி செய்யுமாறு வலியுறுத்தி மறைந்தது.

அடுத்த நாள், அரண்மனையில் ஒரு செய்தி பரவியது. ராணியை ஒரு பாம்பு கடித்துவிட்டதாக தலைநகர் முழுவதும் உள்ள சிறந்த வைத்தியர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், ராணி விழிக்காமல் தூங்கிக்கொண்டிருந்தார். ராஜா, யாரேனும் ராணியை குணப்படுத்தினால் பரிசு தருவதாக அறிவித்தார்.

ஆதித்யாவுக்கு விடுதலை: இறுதியில், நேர்மை வெற்றி பெற்றது!

சிறையில் இருந்த ஆதித்யா, காவலாளியிடம், "என்னால் ராணியை குணப்படுத்த முடியும்," என்று கூறினான். காவலாளி இதை ராஜாவிடம் கூற, உடனே ராஜா, ஆதித்யாவை அழைத்தார்.

அரசர் அவனை ராணி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்.

"நான் ராணியின் அறைக்குள் தனியாகவே செல்ல வேண்டும். வேறு யாரும் உள்ளே இருக்கக்கூடாது. இல்லையென்றால் மருந்து வேலை செய்யாது." என்று ஆதித்யா கூறினான்.

ராஜா, காவலர்களிடம் ஆதித்யாவைத் தவிர யாரும் அறைக்குள் செல்லக்கூடாது என்று கடுமையான உத்தரவை விட்டார்.

ஆதித்யா அறைக்குள் நுழைந்தபோது, அறை அமைதியாக இருந்தது. ஆதித்யா பாம்பின் பெயரை மெல்லச் சொன்னான்.
பாம்பு புன்சிரிப்புடன் வந்து, ராணியின் உடலில் இருந்த விஷத்தை வெளியே எடுத்து விடப்போகும் போது, ஆதித்யா நன்றி கூறினான்.

சில நிமிடங்கள் கழித்து, ராணி விழித்துக் கொண்டார்.

ராஜா மகிழ்ச்சியுடன், "இளைஞனே! நீ விரும்பும் எந்த பரிசையும் கேட்கலாம்!" என்றார்.

"அரசே, எனக்கு செல்வம் எதுவும் வேண்டாம்.

நான் கேட்டுக்கொள்வது ஒன்று மட்டுமே. என்னுடைய தரப்பு நியாயத்தை கேட்டு, நான் உங்கள் தம்பியைத் துன்புறுத்தவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும்," என்று வேண்டிக்கொண்டான்.

ஆதித்யா, பின்னர் நடந்ததை முழுமையாகக் கூறினான்.

புலி, பொற்க்கொல்லன், பாம்பு ஆகிய மூவரின் வாக்குறுதிகளையும் கூறி, நடந்ததை விவரித்தான்.

ராஜா, ஆதித்யாவின் சிறைத் தண்டனையை ரத்து செய்து, பொற்க்கொள்ளனுக்கு தக்க தண்டனை வழங்கினார்.

அதன்பிறகு, ஆதித்யாவின் நேர்மைக்கு பரிசாக, தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு பொன் பையை பரிசாக அளித்தார்.

மூன்று வாக்குறுதிகள்! - கதையை வீடியோ வடிவில் காண: